தனியாருக்கு முறைகேடாக விதை விற்பனை: லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய வேளாண் உதவி இயக்குநர்!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 23,42,150 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள்
வேளாண்மைத்துறையில் பணியாற்றும் அலுவலர்களில் பெரும்பாலானோர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதால், விவசாயிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகள், பலன்கள், கிடைக்காமல் போய்விடுகிறது. அதிகளவில் லஞ்சம் மற்றும் ஊழல்கள் தாண்டவமாடக்கூடிய துறையாக இது திகழ்கிறது. ஆனாலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் இவர்கள் பெரும்பாலும் சிக்குவதே இல்லை.
இந்நிலையில்தான், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை நடத்தி, 23,42,150 ரூபாய் பணத்தை கைப்பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு விதை உளுந்து வழங்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் மற்றும் இங்கு பணியாற்றும் அலுவலர்கள் கூட்டு சேர்ந்து, விவசாயிகளுக்கு விதை உளுந்து விற்பனை செய்ததாக, போலி ஆவணங்கள் தயாரித்து, அதை தனியாரிடம் விற்றதாக இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு ரகசிய தகவல் கொடுத்திருக்கிறார் கள்
அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் 13 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள், வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 6 அலுவலர்கள் பணியில் இருந்துள்ளனர்
அப்போது லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர் அனைவரிடமும் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 23,42,150 ரூபாய் பணம் இருந்துள்ளது. உடனடியாக அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதோடு பாலசுப்ரமணியன் வீட்டிலும் அதிரடி சோதனை நடைபெற்றது. மேலும் விதை மானிய திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய விதை உளுந்தை முறைகேடாக யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக